பௌலிங்
செல்லோ வில் எனக்குத்தெரிந்த உருப்படியான பொழுதுபோக்கும் இடம் பௌலிங் விளையாடும் இடம். நான் அந்த விளையாட்டை இதுவரையில் திரையில் தான் பார்த்திருக்கிறேன். முதன்முதலாக அங்கு விளையாட கோபால், முருகைய்யன் தூண்டுதலால் வார நாளில் விளையாடச்சென்றோம். எங்களுடன் கிருஷ்ணா, ஸ்ரீனிவாஸ் ராவ், சுப்பு, தாரிணி, அன்னா, மைதிலி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். என்னைப் போல் ஒரு சிலரும் அதற்கு புதிது என்பதால், பௌலின் தரையை உடைக்கும் அளவிற்கு அந்த கனமான பந்துகளை உருட்டி விட்டோம். குழுவாகச் சென்றால் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு. இது இரண்டு மூன்று நாட்களுக்கு நடந்தது. பாரதியையும், சித்தார்தையும் இதில் சேர்க்க முயற்சி செய்தேன். அது முடியாமல் போனது. வாரயிறுதி நாளில் நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஈஸ்தோனியா செல்ல ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அலுவலகத்திலிருந்து புறப்பட ஆயத்தமானோம்.
கப்பல் பயணமும் டாலினும்
நான், சுப்பு, ஸ்ரீனிவாஸ் ராவ், அன்னா, மைதிலி, தாரிணி ஆகியோர் பயண முன்பதிவு செய்த அதே “வைகின் லைன் ஃபெர்ரி” என்னும் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தோம். முதன்முதலில் கப்பலில் பயணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் இனம் புரியாத ஆர்வத்தையும், குதூகலத்தையும் உண்டுபன்னியது. ஹெல்சின்கியிலிருந்து டாலினுக்கு நிறைய பேர் வந்து குழுமியிருந்தார்கள். கப்பல் நிரம்பி வழிந்தது என்றே கூறலாம். கப்பலில் 9 அடுக்கு மாடிகள் இருந்தது. கீழ் உள்ள மூன்று அடுக்குகள் கப்பல் சம்மந்தப் பட்டதாகவும், கார் போன்ற வாகனங்களை சுமந்து செல்வதற்காகவும் இருந்தது. ஒரு மாடியில் உணவு விடுதியும், கூத்தடிக்கும்(அதாங்க பார்) இடமும் இருந்தது. மற்ற மாடிகளில் பயணிகள் தங்குவதற்க்கு என்று இருந்தது. பயணிகள் தங்குவதற்க்கு தனி அறைகள் இருந்தன. நாங்கள் அறையில் உடனே தங்காமல் கப்பலில் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பப்பா, என்ன ஒரு குளிர். சும்மா நின்று கொண்டிருந்தாலே குளிராக இருக்கும். அதுவும் கப்பல் நகர்ந்து கொண்டிருக்கிறது. கேட்கவா வேண்டும். அந்த கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஃபோட்டோப் பிரியர்களான நானும் மைதிலியும் சில க்ளிக் செய்தோம். கப்பல் ஒன்றும் அவ்வளவு வேகமாக செல்லவில்லை. இருந்தும் காற்றைக் கிழித்து சென்று கொண்டிருப்பதால் குளிரின் கடுமை சற்று அதிகமாகவே இருந்தது. இரண்டரை மணி நேரத்தில் கப்பல் டாலினைச் சென்றடைந்தது. அதாவது இரவு 12 மணிக்கு. ஆனாலும் அதிலே தூங்கிப் போனோம். காலை மறுபடியும் கப்பல் ஹெல்சின்கி செல்வதற்க்கு ஆயத்தப் படுத்தவேண்டியிருப்பதால் கப்பல் தொழிலாளிகள் எங்களை எழுப்பிவிட்டனர். இதுவும் ஷெங்கன் எல்லைகுள் இருந்ததால் எங்களை பாஸ்போர்ட் விசாரிப்பு என்று எதுவும் செய்யவில்லை.
ஈஸ்தோனியா, ஃபின்லாந்திற்கு தெற்கே இருந்தபடியால் அங்கே குளிரின் கடுமை சற்றே குறைந்து காணப்பட்டது அந்நேரத்தில். லேசாக மழையுடனும், மேகமூட்டத்துடனும் (மப்பும் மந்தாரமுமாக) இருந்ததால் மனது அதில் லயிக்கத் துவங்கியது. துறைமுகத்தில் இருந்த சுற்றுலா செய்தி மையம் மூடியிருந்தபடியால், அந்த நபரின் வருகைக்காக காத்திருந்தோம். பின்னர் அவரிடம் சில விவரங்களைக் கேட்டறிந்து, அந்நகரத்தின் வரைபடத்தையும் வாங்கிக் கொண்டு, பெய்யும் சிறு தூறலில் நடக்கலானோம். ஃபின்லாந்திற்கு மிக அருகில் இருந்தாலும் இங்கு பேசும் மொழியோ வித்யாசமானது. மக்களின் குணாதிசயங்கள் ஃபின்லாந்து நாட்டினரையே ஒத்திருந்தது. இவர்களும் ஆங்கிலத்தில் வீக். அங்கிருந்து நடந்து சென்று ஒரு ட்ராமில் ஏறினோம். அதில் “கார்டியாக் கிங் பேலஸ்” என்று எழுதியிருந்தது. அனைவரும் ஏறிச் சென்றோம். கடைசியில் ஒரு ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தியது. அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெரிய பூங்காவும் அதையொட்டி சிறிதளவில் ஒரு வீடும் தெரிந்தது.
அப்பொழுதுதான் பின்பனிக்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பித்த காலம். எனவே பூங்காவிலுள்ள் புற்பூண்டுகள் பழுப்பு நிறத்திலிருந்து பச்சை வண்ணம் பூசிக்கொண்டிருந்தன. சில இடங்களில் இன்னும் பனிக் கட்டிகள் உருகாமல் வெளேரென்று இருந்தன. சில பாதி உருகி, பாதி அங்குள்ள மண்ணில் கலந்து, வெண்ணிறப் பனிக் கட்டி திருஷ்டி பட்டது போல் கருமையாக இருந்தன. சில இடங்களில் பனி உருகித் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தன. சில மரங்கள் பட்ட மரங்களாகவும், சில துளிர் விட்டும் இருந்தன. அந்த ஆள் அரவமற்ற ரம்யமான இடத்தில் இங்குமங்குமாகச் சென்று சில புகைப்படங்கள் எடுத்தோம். சுப்புவும், ஸ்ரீனியும், தனியாகச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ஏனோ தெரியவில்லை. என்ன என்று கேட்டதற்க்கும் சரியாகப் பேசவில்லை. அதன் அர்த்தம் பின்னர் தான் எனக்குப் புலப்பட்டது. அந்தப் பூங்காவின் இறுதியில் ஒரு வீடு இருந்தது என்று சொன்னேனல்லவா? அது தான் அரண்மனையாம். எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. உள்ளே சென்று சில ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சில அழகிய வேலைப்பாடமைந்த உபகரணங்கள் இருந்தன. ஓவியங்கள் அழகாகத்தான் இருந்தன. ஆனால் அர்த்தம்தான் புரியவில்லை. இதெல்லாம் ஒரு அரண்மனை, இதைப் பார்க்க வந்தோமே என்றெண்ணினேன். உடனே அந்த அழகான பூங்காவைப் பார்த்த ஞாபகம் வந்ததால் அந்த அலுப்பு நீங்கியது.
அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் கடற்கரை தெரிந்தது. சிறிது தூரம் நடந்த பிறகு அங்கே அடைந்தோம். ஹெல்சின்கியில் உறைந்து காணப்பட்ட அதே பால்டிக் கடல் தான். அலையே இல்லாத பால்டிக் கடல். நம்மூர் ஏரியைப் போல் சிற்சில அலைகள் அவ்வளவுதான். தனிமையில் வங்காள விரிகுடா முன், எழுந்து விழும் அலைகளின் நாட்டியத்தையும், அலையோசையையும் ஒருங்கே கண்ட அரங்கேற்றத்தை இக்கடலில் கண்டு கேட்கக் கிடைக்காததால் எரிச்சல் தான் வருகிறது. இருந்தாலும் டாலின் துறைமுகத்திற்கு வந்து செல்லும் கப்பல்களின் அழகைக் கண்டுகளிக்கலாம். பின்னர் நண்பகல் நேரம் வந்தது. அனைவருக்கும் பசி. உடனே கண்கள் இந்திய உணவு விடுதியைத் தேட ஆரம்பித்தது. காலையில் அந்த சுற்றுலா செய்தி மைய அம்மணியிடம் கேட்டிருந்த சில குறிப்புகளால் மஹாராஜா ஹோட்டலை சென்றடையும் வழியை நெருங்கிவிட்டோம். அங்கிருந்து ஒரு வழியாக உணவு விடுதியை அடைந்து உணவுகளைக் கோரினோம். அவர்கள் எங்கள் பொருமையைச் சோதித்தார்கள். உண்டவுடன் ஏற்படும் புதுத்தெம்பினால் டாலின் பழைய நகரத்தைச் சுற்ற தீர்மானித்தோம். நாங்கள் பார்க்கிறோமோ இல்லையோ, எங்கள் கேமிராவில் தான் முதலில் கை சென்று க்ளிக் செய்தன. இந்த நகரம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. 1600 ம் ஆண்டுகளில் கட்டியிருந்த பழைய கட்டிடங்கள் பிரம்மாண்டமாக நெடிதுயர்ந்து காட்சியளித்தன. கும்பல் கும்பலாக சென்ற மக்களினூடே எங்கள் நண்பர்கள் திடீர் திடீரென்று மறைந்து பின்னர் அவர்களைக் காணும் போது அப்பாடா என்று தோன்றும். அங்கு சில கடைகளுக்குள் சென்று தாரிணியும், மைதிலியும் ஷாப்பிங் செய்தனர்.
சிலதூரம் நடந்த பிறகு, திரும்பிச் சென்று, வேறு ஏதாவது இடத்தைப் பார்க்கலாம் என்று தீர்மானித்தோம். திரும்பி வரும் வழியில், மைதிலி ஒரு டாலின் கிழவரிடம் தன் கேமிராவைக் கொடுத்து சில புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்பு அதே குறும்புக்கார கிழவரிடத்தில் சென்று எங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். (போயும் போயும் அந்த தாத்தா தானா கிடைத்தார் ?). அவர் ஒரு குறும்புக்கார தாத்தா தான். அவர் ஒரு பெரிய குழுவினருடன் வந்திருந்தார். அந்த குழுவே இவரால் கல கல வென்றிருந்தது. நான் தான் அந்த புகைப்படம் எடுக்கலானேன். அந்தக் குழுவை புகைப்படத்தில் அடக்க சற்று தள்ளி நின்று புகைப்படம் எடுத்தேன். புகைப்படம் எடுத்தவுடன் அங்கு சற்று கல கல வென்றிருந்தது. மைதிலியிடம் அந்தக் கிழவர் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். உடனே களீர் என்ற சிரிப்புச் சத்தம் கேட்டது. உடனே சுப்பு, நோ நோ என்று படுவேகமாக சென்று அந்தக் கிழவரிடம் ஏதோ கூற, அவரும் சிரித்துக்கொண்டே கிளம்பினார். ஒன்றும் புரியாத மைதிலி என்னிடம் வந்து,
“என்னங்க, என்ன ஆச்சு? எனக்கு ஒன்னும் புரியலயே”, என்றாள் ஒன்றும் புரியாதவளாய்.
“எனக்கு எப்டிங்க தெரியும், நான் அங்கல்ல இருந்தேன்”, என்றேன். உடனே சுப்புவிடம் விஷயம் கேட்டறிந்தேன்.
அதை நாசுக்காக மைதிலியிடம் சொன்னவுடன் அவளின் கண்கள் அகல விரிந்தது.
“அய்யோ, என்ன பெரிய தப்பு நடந்திருக்கும்”, என்றவள், சுப்புவிடம் நன்றி தெரிவித்துக்கொண்டாள்.
நல்லவேளையாக சுப்பு (சூப்பர் சுப்பு - ஹீரோ கணக்கா) அன்று காப்பாற்றினார். இல்லையென்றால் அவள் அன்று முழுதும் அழுதுகொண்டிருந்திருப்பாள்.
அந்தக் குறும்புக்கார கிழவர் மைதிலியிடம் அப்படி என்ன கொடுக்க வந்தார்? தாரிணி பின்னாளில் அந்தக் கிழவரை ”டாலின் கமல்” என்று சரியான பெயர் வைத்து நான் எடுத்த அந்தக் கிழவர் இருந்த புகைப்படத்திற்கு பெயரிட்டிருந்தாள். இப்பொழுது புரிந்திருக்குமே?
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. அந்த விஷயம் நடந்த நேரத்தில் தாரிணி ஒரு பத்து அடி தள்ளி நின்றுகொண்டிருந்தாள். புகைப்படம் எடுத்தவுடன் ஒரே ஓட்டமாக ஓடுவதைப் பார்த்தேன்.
அங்கிருந்து ஓபன் ஏர் மியுசியம் ( திறந்தவெளி அருங்காட்சியகம்) பார்க்க சென்றோம். அதுவும் ஒரு ஆள் அரவமற்ற ஒரு இடம். அது ஒரு பழைய கிராமம். அதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அதன் பாதையும் சரி, அதிலுள்ள குடிசைகளும் சரி, ஆங்காங்கே இருக்கும் சேறும் அப்படியே ஒரு இந்திய கிராமத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதனுள் நுழைந்தவுடன் ஒரு வழிகாட்டி ஹெட்ஃபோனையும், ஒரு வரைபடத்தையும் குடுத்தார்கள். சில நேரமே அதில் கவனம் செலுத்தினேன். பின்னர் அதைக் கழட்டி விட்டு தனியாக சில தூரம் நடந்து சென்றேன். அதன் பாதை நீண்டுகொண்டே சென்றது. உள்ளே போக போக காடு வளர்ந்துகொண்டிருந்தது. உடனே பின்னால் வருபவர்களுக்காக காத்திருந்தேன். புகைப்படங்கள் எடுத்து பின்னர் வந்த வழியே திரும்ப தீர்மானித்தோம். அந்த இடமும் இப்பொழுது பார்க்கக் கூடிய இடமன்று. வேனிற் காலத்தில் பச்சைப் பசேலென்றிருக்கும்போது காண வேண்டியது என எண்ணினேன். அதற்குள் நேரமாகிவிட்டது. உடனே துறைமுகத்திற்கு செல்ல முடிவெடுத்தோம். மறுபடியும் எந்தப் பக்கம் பேருந்திற்கு நிற்பது என்பது பற்றிய குழப்பம். மறுபடியும் சரியாக வழியைப் பார்க்கவில்லை என்று என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார் சுப்பு. அதுவரைக்கும் எதிலும் கலந்துகொள்ளாமல் ”அவர் வேறு நாங்கள் வேறாக” வந்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னை ஏன் திட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன் மனதில் ஆத்திரத்துடன்.
அங்கிருந்து துறைமுகத்திற்கு செல்ல ஒரு பேருந்து வந்தது. பிறகு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு ஈஸ்தோனிய ஆசாமி எங்களுக்கு உதவினார் துறைமுகத்தை அடைய. அவரை அணுகுவது மற்றும் விசாரிப்பது போன்ற, எல்லாவற்றிற்கும் ஒரு சிறு உதவி கூட புரியாமல் சுப்பு வந்தது என் மனதை உறுத்தியது. பிறகு அப்படி எதிர்பார்ப்பது தவறு என்றென்னினேன். அங்கிருந்து ஃபெர்ரி யைச் சென்றடைந்தோம். சில நிமிடங்களில் கப்பல் நகர ஆரம்பித்தது. இது பகல் வேளையாததால் அறை எதுவும் ஒதுக்கவில்லை. சில நாற்காலிகளைப் போட்டு அதில் அமர்ந்து வரவேண்டுமாம். எனக்கு அங்கு உட்கார மனமில்லை. உடனே தாரிணி என்னிடம்,
“ஏங்க, நாங்க மேல் மாடிக்கு போறோம், எங்க பேக் லாம் பார்த்துகரிங்களா?”, என்றாள்
“ஹலோ நானும் வரேன், இங்க இருந்து நான் என்ன பன்னபோறேன்”, என்றேன்.
“சுப்பு, நீங்க வர்ரீங்களா?”, என்று கேட்டேன்
“ ”,
பதில் ஏதுமில்லை அவரிடமிருந்து.
“சரி வரலனா எங்க பேக் பாத்துக்கரிங்களா?”, என்றேன்
“”,
பதிலேதுமில்லை மறுபடியும் அவரிடமிருந்து. அனேகமாக அவரது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தேன். கோபத்தில் அவரது கண்கள் தீப்பொறி பறந்தது.
நாங்கள் எங்கள் பைகளுடன் மேலே சென்று கப்பல் செல்லும் அழகைப் பார்க்கலானோம். புகைப்படங்களாய் எடுத்துத் தள்ளினோம். சுற்றி சுற்றி வந்து, அவ்வப்போது கப்பலின் உள்ளே வந்து குளிரிலிருந்து தப்பிப்பதற்காக அசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் வெளியே சென்றோம். சிறிது நேரம் கழித்து சுப்புவும் அவரது கேமிராவைக் கொண்டு சில புகைப்படங்களை எடுத்தார், ஆனால் அவர் எங்கள் பக்கம் வரவேயில்லை. பின்னர் உணவகத்திற்கு செல்ல தீர்மானித்தோம். அங்கே ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தால், ஒரு பெண்மணி பாட்டு பாடியும், உற்சாகமாக பேசிக்கொண்டும் அங்கிருந்த குழந்தைகளை உற்சாகமூட்டிக்கொண்டிருந்தாள். சிறியவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் அந்தக் கூத்தில் சேர்ந்துக்கொண்டனர். அங்கிருந்தவர்களில் எல்லரின் கையிலும் குறைந்தது ஒரு பீர் கோப்பையாவது இருக்கும். அந்தப் பெண்மணி என்ன பேசுகிறாள் என்று தெரிந்து கொள்ளமுடியவிலை. ஃபின்னிஷ் மொழியில் பேசிக்கொண்டிருக்கவேண்டும். அங்கு இன்னொரு கவனத்தைக் கவரும் விஷயம், ”டேக்ஸ் ஃப்ரீ ஷாப்பிங்” ல் மூட்டை மூட்டையாக ஆல்கஹாலை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள் ஃபின்னிஷ் ஆசாமிகள். ஆல்கஹால் பிரியர்கள் உலகமெங்கும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் போலும். நாங்கள் ஹெல்சின்கி வந்தவுடன் அங்கிருந்து சில பேரால் நடக்கக்கூட முடியாத அளவிற்க்கு குடித்துவிட்டிருந்தனர். அவர்களைத் தாங்கி கொண்டே அவர்கள் கூட வந்திருந்த பெண்ணோ அல்லது ஆணோ துறைமுகத்தை அடைந்தனர்.
அங்கிருந்து ஹெல்சின்கி ரயில் நிலையத்திற்கு செல்ல ஒரு ட்ராமில் ஏறினோம். அது நிரம்பி வழிந்தது. அப்போது மெத்தக் குடித்திருந்த ஒரு ஃபின்னிஷ் பெண்மணி மைதிலியைப் பார்த்தவுடன், பின்வருமாறு ஆங்கிலத்தில் உரையாடியதை தமிழில்,
“நீங்கள், இந்தியப் பெண்மணியா?”, என்றாள்
“ஆமாம்”, என்றாள் மைதிலி.
“நீங்கள் ஹெல்சின்கியைச் சுற்றிப் பார்த்து விட்டீர்களா?”, என்றாள் அப்பெண்மணி.
ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“ஹெல்சின்கியில் ஒரு அதிசயமான சர்ச் உள்ளது, அதன் பெயர் சர்ச் அண்டர் தி ராக், முடிந்தால் அதையும் பார்த்து விடுங்கள்”, என்றாள்.
பின் ஏதேதோ பேசினாள் அப்பெண்மணி. உடனே அப்பெண்மணியைப் பற்றி சிறிது நேரம் பேசிச் சிரித்து அங்கிருந்து லெப்பவாரா வை (அதாங்க செல்லோ இருக்கும் இடம்) அடைந்தோம். அங்கிருந்து ஸ்டேயட் நடந்து சென்றோம். அன்றிலிருந்து அந்த “சர்ச் அண்டர் தி ராக்” ஐப் பார்க்க எவ்வளவோ திட்டமிட்டும் அதைப் போய் பார்க்க முடியவில்லை.
ஸ்டாக்ஹோம் போய் வந்திருந்த கிருஷ்ணாவும் நானும் மறுநாள் சமைத்து உண்டோம். பின்னர் சுப்பு எங்கள் அறைக்கு வந்து கிருஷ்ணா விடம் என் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார்.
“எப்டி போச்சுங்க சுப்பு”, கிருஷ்ணா ஆரம்பித்தார்.
“ஒரே காமெடியா இருந்துச்சு போங்க”, என்ற சுப்பு தொடர்ந்தார்.
“அவங்களா டிசைட் பன்றாங்க, அவங்களா போராங்க“ என்று என்னைக் குற்றம் செய்தவராகப் பார்த்தார்.
“என்னங்க எல்லாம் நல்லாத்தானே முடிஞ்சுது, பின்ன ஏன் இப்டி பேசரிங்க”, என்றேன்.
”அவங்க அவங்க ஒரு எடத்துக்கு போறாங்க, என் பேச்சை யாருமே கேக்கல, இவனும் அந்த பொண்ணுங்க கூடவே போறான்”, என்று கத்திக் கூறி, இன்னும் ஏதேதோ கூறி, தான் காப்பாற்றிய விஷயத்தையும் கூறிமுடித்தார்.
மேற்கூறியவற்றில் கடைசி வார்த்தை என்னை ஈட்டியில் குத்தியது போல் இருந்தது.
“ஏங்க நாம எல்லரும் ஒன்னாதானே போனோம், இப்ப அந்த பொண்ணுங்க கூட போறேன்னு பிரிச்சு பேசரிங்களே”, என்றேன் எரிச்சலாய்.
“” , பதிலேதுமில்லை சுப்புவிடம். சிறிது மௌனத்திற்கு பிறகு,
“சுப்பு, அவங்க சின்ன பசங்க, அப்டி தான் போவாங்க, நீங்க தான் கண்ட்ரோல் ல வச்சிருக்கனும்”, என்றார் கிருஷ்ணா.
“சரிங்க உங்கள மதிக்கலனு பேசரிங்களே, அங்க நீங்க ஏதோ மூனாவது மனுஷன் மாதிரி பிஹேவ் பன்னினீங்களே”, என்றேன் கோபத்தை அடக்கியவாறு.
“எனக்கு கோபம், அதான் அப்டி செஞ்சேன்”, என்றார் அசட்டையாக.
“சரி விடுங்க எல்லாம் நல்லதா தானே முடிஞ்சது, நீங்க ரெண்டுபேரும் ஏன் கோபப்படரீங்க”, என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.
அதற்கு மேல் எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அவ்வளவு தான், சுப்பு இனிமேல் எங்களுடன் எந்த ஒரு பயணத்திற்கும் வரவில்லை. அவரை மதிக்கவேயில்லை என்ற அவரது குற்றச்சாட்டு நியாமானதே. அதைப் பின்னர் யோசித்து உறுதி செய்தேன். பின்னாளில் இது போல் நடந்ததை நான் மறந்தே போனேன். அவரிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். இப்பொழுது நாட்குறிப்பில் பார்க்கும்போதுதான் அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. இதைப் போன்ற நிகழ்வு எல்லார் வாழ்விலும் நடக்கக் கூடியதே. அதனால் இதை மறைத்தெழுத மனம் இல்லை.
முருகைய்யனின் பிரிவு
மறுநாள் ஏப்ரல் 13, 2009, ஈஸ்டர் மண்டே. விடுமுறை தினம். அன்று நானும் கிருஷ்ணாவும் முருகைய்யனுக்காக சாப்பாடு செய்தோம். விதவிதமாக ஏதோ எங்களால் முடிந்த வரை செய்து பின்னர் முருகைய்யனின் பாராட்டைப் பெற்றோம். அதற்குள் நான் சமைக்க ஓரளவு கற்று வைத்திருந்தேன். அதன் பின்னர் செல்லோவில் பௌலிங் விளையாட முடிவுசெய்தோம். கோபால் தான் ஒருங்கிணைப்பாளர். முருகைய்யன், நான், மைதிலி, அன்னா, தாரிணி வந்தனர். பாலா, பாரதியும், சித்தார்தையும் கூப்பிட முயற்சி செய்தோம். பலனில்லை. அவர்கள் ஈஸ்த்தோனியா சென்றிருந்தனர். மற்றவர் யாரும் வரவில்லை. முருகைய்யனுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது இந்தியா செல்ல. அவர் அந்த குதூகலத்தில் இருந்தார். பௌலிங் விளையாடிக் கொண்டிருக்கும்போதே கோபால் திடீரென்று கிளம்பிவிட்டார். நாங்கள் விளையாடி முடித்த பின்னர் அங்கிருந்த ஒரு பிஸ்ஸா ஷாப்பில் சாப்பிட எத்தனித்தோம். அங்கு நடந்த உரையாடல்,
“என்ன எல்லாரும் அமைதியா சாப்ட்ரீங்க, ஏதாச்சும் பேசுங்க”, என்று ஆரம்பித்தார். பின்னர் தொடர்ந்தார்.
“கணேசன் இன்னிக்கு நல்லா விளையாடினான். எனக்கு தெரியும் அவனை சின்னதா மோடிவேட் பன்னினா நல்ல பன்னுவான்,
ஹே யு நோ வி வொர்க்ட் இன் எ டீம் இன் ப்ரீவியஸ் கம்பனி”, என்றார்.
”அண்ட் ஹி வாஸ் மை மேனேஜர் தேர்”, என்று கூறி நகைத்தேன்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேலண்ட் இருக்கு. மைதிலி இஸ் எ கிளாசிக்கல் டேன்ஸர். ஹவ் அபவுட் யு அன்னா?”, என்று கேட்டார்.
“ஐ யூஸ்டு டு பி எ மாரத்தான் பிளேயர்”, என்றாள். எனக்கு ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலைய சம்பவம் நினைவுக்கு வந்தது.
“தாரிணி சிங்ஸ் வெல், டு யு நோ தட்?”, என்று முருகைய்யனைப் பார்த்துக் கேட்டேன்.
”ஓ அப்டியா, குட்”, என்றார்.
”ஐ வில் டெல் அபவுட் கணேசன், ஹி வாஸ் எ ஸ்கூல் டாப்பர்”, என்று கூறி என்னைப் பார்த்து புன்னகை புரிந்தார்.
பின்னர் முருகைய்யனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவர் தான் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா செல்வதையே பெரிதாகக் கூறிக்கொண்டிருந்தார். பின்னர் தாரிணியை ஸ்டேயட் வரும் வரை பாடச் சொல்லி கேட்டுக் கொண்டார். நாங்களும் மெய் மறந்து கேட்டுக் கொண்டே வந்தோம். அவளின் குரல் தான் எத்துனை அழகு. முதன் முதலாக அவள் பாடக் கேட்டேன். குரலில் தான் எத்தனை இனிமை. கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது. வழக்கமாக கடினமாக இருக்கும் லெப்பவாரா விலிருந்து ஸ்டேயட் நடைப்பயணம் அவளின் பாடலினால் எளிதானது. அதற்குள் ஸ்டேயட் வந்துவிட்டது.
மலரும் மனம் தொடரும் ...
No comments:
Post a Comment