Sunday, November 29, 2009

எனது ஃபின்லாந்து செலவு - தொடர்ச்சி

வாடிக்கையாளருடன் இரவு உணவு (Customer's team dinner)

ஏப்ரல் 16, 2009 எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுடன் இரவு உணவு உண்ண தீர்மானித்தனர். அதுவும் இந்தியன் உணவு விடுதிக்கு செல்லவும் முடிவு செய்தனர். எங்கள் குழுவில் பாரதி, சித்தார்த் மற்றும் தாரிணி தவிர எல்லாரும் இருந்தனர். ஹெல்சின்கியில் உள்ள மகாராஜா ஹோட்டலில் நாங்கள் குழுமினோம். எங்கள் வாடிக்கையாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 15 முதல் 20 வருடங்கள் வேலை அனுபவம் வாய்ந்தவர்கள். இதை நானே ஏதேச்சையாக அவர்களில் ஒருவரிடம் கேட்டுத் தொலைக்க அவர் புன்னகையுடன் எனக்கு 20 வருடங்கள் இதே அலுவலகத்தில் அனுபவம் உள்ளது என்று கூறியவுடன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. 20 வருடங்களாக செய்த வேலையை 5 வருடங்கள் அனுபவம் உள்ள நான் செய்யப் போகிறேன் என்று உள்ளுக்குள் சிரித்தேன். அதன் பிறகு அடக்கி வாசித்தேன். பின்னர் உணவு அட்டவணையைக் கொடுத்தவுடன் அவர்கள் எங்களிடம் உதவி கோரி அவர்களுக்கான உணவையும் கட்டளை பிறப்பித்தோம். உணவு தயாராகும் வரையில் எங்கள் பேச்சு ஃபின்லாந்து பற்றியும், அதன் மொழி, கலாச்சாரம் பற்றியும் இருந்தது. நிறைய பேர் இருந்ததால், அங்கே ஒரே மேஜையில் அமர்ந்திருந்தும் இரண்டு குழுவாகப் பிரிந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் குழுவில் கோபால் பேசிக்கொண்டே இருந்தார். சில நேரம் அவர்களின் பொறுமையையும், எங்களின் பொறுமையையும் சோதித்தார் என்றே சொல்ல வேண்டும். அவர் நிறுத்திய நேரங்களில் மட்டுமே நாங்கள் பேச அவகாசம் கிடைத்தது. சில நேரம் எங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தோம். நான் அவர்களில் சிறிது வயதானவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தேன். அவரும் அலுக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கோபால் வளவளவென்று பேசிக்கொண்டிருந்ததால் கோபாலிடம் பேசாமல் எங்களிடம் பேச முயன்று கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசாமல் இருந்த நேரங்களில் என்னை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே மைதிலி,

“ஏங்க, அவர் உங்களையே பாத்துட்டு இருக்காருங்க, ஏதாச்சும் பேசுங்க”, என்றாள்.

”என்ன பேச?”, என்றேன்.

“ஏதாச்சும், ஆங் ! அன்னிக்கு ஒரு லேடி சர்ச் அண்டர் தி ராக் பத்தி சொன்னாங்கல்ல, அத பத்தி கேளுங்க”, என்றாள்.

நான் அதைப் பற்றிக் கேட்டதுதான் தாமதம், உடனே கூகிள் மேப்பில் அதைத் தேடிப் பிடித்து, அருகில் இருந்த இன்னொருவரிடமும் அதைப் பற்றிக் கேட்டு எங்களிடம் கூறினார். அங்கு எப்படி போவது பற்றியும், ஹெல்சின்கியில் உள்ள மற்ற இடங்களுக்கு எப்படி போவது என்றும் எங்களுக்கு விளக்கமாகக் கூறினார். அதன் பின்னர் மைதிலி என்னிடம்,

“ஸோ க்யூட் இல்ல இவங்க?”, என்று என் காதில் மட்டும் விழுமாறு கூறிச் சிரித்தாள். அதையும் அம்மனிதர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மேஜையில் இருந்த இன்னொரு குழு என்ன பேசுகிறது என்று ஊகிக்க முடியவில்லை. அவர்களும் இதைப் போன்ற ஒரு மொக்கையைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் உணவு வந்ததும் அதில் தான் என் முழுக்கவனமும். ஒரு பிடிபிடித்தேன். பின்னர் இனிப்பு சாப்பிடும் வேளை வந்தது. அதற்கும் எங்களின் உதவியை நாடினர். கோபால் அவர்களிடம் க்ளோப் ஜாமூன் நன்றாயிருக்கும் என்று கூறவே எல்லாரும் அதையே கேட்டனர். ஆனால் அது தீர்ந்து போனது என்றவுடன் ஆஹா ஆஹா என்று ஒரே குரலில் அவர்கள் அனைவரும் கூறிச் சிரித்தனர். இரவு உணவு ஒருவழியாக முடிவுற்றது.

வீ - கீ (Whee-Ghee) அருங்காட்சியகம்

ஃபின்லாந்து நாட்டின் கலை, கலாச்சாரம் முதலிய அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தன வீ - கீ அருங்காட்சியகத்தில். ஏப்ரல் 18,2009 அன்று காலை எங்கு செல்வது சென்று நானும் பாரதியும், அவரின் குடியிருப்பில் இணைய வலையில் தேடிப் பின்னர் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்வதெனத் தீர்மானித்தோம். வழக்கம்போல் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் யாரும் வரச் சம்மதிக்கவில்லை. பின்னர் கோபாலும், பாலாவும் எங்களுடன் வருவதாகக் கூறினர். அப்பொழுதெல்லாம் பாலா அவ்வளவாக எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கவில்லை. ஆனால் இதுதான் பாலா முதன் முறையாக எங்களுடன் வெளியில் வந்த பயணம். இந்த அருங்காட்சியகத்தில் பல சிறிய அருங்காட்சியகங்கள் ஒருங்கே இருந்தன. அவற்றில் முக்கியமானது ஒரு ஃபின்னிஷ் பெண்மணி உலகெல்லாம் சுற்றித் திரிந்து கண்டெடுத்த அல்லது வாங்கிய பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து வைத்ததுதான்.

முதலில் ஒரு சிலை மற்றும் சித்திரக் கண்காட்சி உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றோம். நிறைய எனக்குப் புரியவேயில்லை. ஆனால் ஃபின்லாந்து பற்றி முழுதும் தெரிந்துகொள்ள நினைக்கிறவர்கள் அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு நான் ஏற்கனவே கூறிய அந்த ஃபின்னிஷ் பெண்மணியின் அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அந்தப் பெண்மணி உலகில் எந்தக் கண்டத்தையும் விட்டு வைக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லாப் பழைமையான நாடுகளையும் சுற்றித் திரிந்து அந்நாட்டின் மிகப் பாரம்பரியமான பொருட்களையெல்லாம் சேகரித்துள்ளார். ஒவ்வொரு கண்டங்களாகப் பார்த்து முடிக்கும்போது, ஆசியக் கண்டமும் அதில் இந்தியாவும் இருக்குமா என்று மனம் ஆவலாய் விரும்பியது. என் ஆவலைப் பூர்த்தி செய்தாள் அப்பெண்மணி. மற்ற எல்லா நாடுகளின் மக்கள் உபயோகித்தப் பொருட்களைத் திரட்டியிருந்த அப்பெண்மணி இந்தியாவில் மட்டும் நம் இந்துக் கடவுள்களின் சிலைகளை சேகரித்துள்ளார். விநாயகப் பெருமானின் சிலையும், சிதம்பரம் நடராஜர் சிலையும், வட இந்தியாவின் பிரசித்திபெற்ற துர்கையின் சிலையும் ஒருங்கே இருக்கக் கண்டேன். அவரது பயணக் குறிப்பில் இந்தியா முழுதும் பயணம் செய்தது பற்றியும், தெற்கே உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசித்ததாகவும் எழுதியுள்ளார். அதை வியந்தும் கூறியுள்ளார். மனதிற்குள் தான் இன்னும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

ஃபின்லாந்து வந்ததிலிருந்து ஒரு கோவிலுக்கும் செல்ல முடியவில்லையே என்ற என் ஏக்கத்தை இந்த அருங்காட்சியகம் தீர்த்து வைத்தது. நான் ஏதோ பக்திப் பரவசத்துடன் எழுதுகிறேன் என்று எண்ண வேண்டாம். பக்திக்கும் ஆன்மீகத் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் மடுவிற்கும் மலைக்கும் உள்ளதைப் போன்றது. ஆனால் மடுவிற்கு சென்றால் தானே மலையேற முடியும். அதனால் இந்தச் சிலைகளைப் பார்த்தவுடன் சிறிது பக்தி வந்தது. என்னைப் பொருத்தவரை கோயில் ஒரு சக்தி பீடம். இதை ஒரு ஆன்மீகவாதித் தாத்தா எனக்கு ஆசி வழங்கிக் கூறினார். இதையே சத்குரு ஜக்கி வாசுதேவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் திருப்பதி போன்ற ஒரு சில கோவில்களுக்குச் சென்றால் புதுச் சக்தி வருவதை (பக்தி வருகிறதோ இல்லையோ) உணர்கிறேன். சரி திருப்பதியிலிருந்து ஃபின்லாந்துக்கு வருவோம்.

அந்த ஃபின்னிஷ் பெண்மணி எழுதிய பயணக் கட்டுரையில், துர்கை, நடராஜரின் மனைவி என்று எழுதியிருந்தது. இதைக் கண்டதும் கோபால், அதைத் தவறு என்றும், பார்வதிதான் நடராஜரின் மனைவி என்றும் அதைச் சுட்டிக்காட்ட அங்கிருந்த ரிஸப்ஷனுக்கு சென்றார் (ரொம்ப முக்கியம்). நாங்களும் அவருடன் சென்றோம். அங்கிருந்த ஃபின்னிஷ் பெண்மணி எங்களை அன்புடன் வரவேற்று எங்களை நலம் விசாரித்து எங்களைப் பற்றிக் கேட்டறிந்தார். அவருக்கு வயது 25 லிருந்து 30 இருக்கும். அதன் பின் அவரை எங்களுக்கு சுய அறிமுகம் செய்தார். அவர் தாம் வடக்கு ஃபின்லாந்தில் ருஷ்யாவை ஒட்டிய பிரதேசத்திலிருந்து வருவதாகக் கூறினார். அவரின் கனிவான பேச்சு இன்னமும் அவர் முகம் என் மனதில் நிழலாட வைக்கிறது. எங்களைப் பார்தவுடன் நீங்கள் இந்தியர்கள் தானே என்று கேட்டார் (எப்டிதான் தெரியுதோ?). அதன் பின் எங்களுக்கும் அந்தப் பெண்மணிக்கும் நடந்த நீண்ட உரையாடலை இங்கே சுருக்கமாக கூறுகிறேன்.

“எல்லா நாட்டைப் பற்றியும் அப்பெண்மணி சேகரித்து வைத்ததைப் பார்த்தீர்களா?”, என்றாள் அப்பெண்மணி.

“எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் ஒரு குறை”, என்றார் கோபால்.

“என்ன?”, வினவினாள்

“இந்தப் பயணக் குறிப்பில் துர்கை, நடராஜரின் மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறது, ஆனால்”, இழுத்தார் கோபால்

“ஓ, அப்படியானால் பார்வதி தான் நடராஜரின் மனைவி, சரிதானா?”, அசர வைத்தாள்.

“எங்கள் ஊரில் நவராத்திரி என்ற ஒரு விழா கொண்டாடுவோம், அதில் துர்கையை ஒரு நாள் கொண்டாடுவோம்”, என்றேன்

“ஓ அப்படியா? என்ன விழா அது?”, என்று கூறி தன் குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டாள்.

“ஒன்பது இரவுகளும் ஒன்பது விதமான பெண் கடவுள்களை வைத்து, கொலு பொம்மைகள் வைத்துக் கொண்டாடுவோம்”, என்றார் கோபால்.

நீண்ட நேரம் நடந்த இந்த உரையாடலில் பாலாவும் சேர்ந்து கொண்டார். ஆனால் பாரதி மட்டும் வாயைத் திறக்கவேயில்லை. அங்கிருந்து வெளிவந்த பின்னர் பாரதி எங்களிடம்,

“யோவ் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியல, அந்தப் பொண்ணு என்னப் பாத்து ஏதாச்சும் கேட்டுருமோன்ற பயத்தில இருந்தேன்”, என்றார் கண்களை விரித்தும் சுருக்கியும் அவருக்கே உரிய பாணியில்.

அந்த உரையாடலினூடே, கோபால் ஃபின்லாந்து பெண்கள் பற்றியும் அவர்கள் குடிப்பதைப் பற்றியும் ஒரு வித ஏளனத்துடன் கேட்டார். அதற்கு அப்பெண், இருக்கலாம் ஆனால் நான் அது மாதிரி பெண் இல்லை என்று தெளிவாக அதே புன்னகையுடன் கூறியது கோபாலுக்கு எப்படியோ? ஆனால் எனக்குத் தேள் கொட்டினார்போல் நறுக்கென்றது.

அங்கிருந்து கடிகார அருங்காட்சியகம் சென்றோம். பலவகை கடிகாரங்களைப் பார்த்தோம். எனக்கு பிடித்தது ஒரு மோதிரத்தில் இருந்த கடிகாரம்.

அந்நேரம் ஃபின்லாந்து நாட்டில், பின் பனி முடிந்து இளவேனில் காலம் ஆரம்பித்தது. சாலையோர மரங்கள் பச்சை ஆடையத் தைத்துக் கொண்டிருந்தன முதுவேனிற் காலத்தில் உடுத்திக் கொள்ளப் பயன்படுமே என்று . சாலையோரமாக இருந்த பனிக் கட்டிகள் உருகி ஆறாக சாலையெங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரானது அந்த மலைப் பாங்கான இடங்களில் தேங்குவதற்கு வாய்ப்பே இல்லாமல் அழகாக பாதாளச் சாக்கடையினுள் சல சல வென்று சென்று மறைந்தது. அதற்கு ஏதுவாக அந்த பாதாளச் சாக்கடையின் மூடிகள் சிற்சில ஓட்டைகளுடன் இருந்தன. பனி பெய்வது நின்றிருந்தாலும் பனிக் காற்று அடித்து வாட்டியது. அந்தப் பனிக்காற்றில் சிறிது நேரம் நடந்து சென்ற பின்னர் நம் முகத்தில் கையைத் தொட்டுப் பார்தால் நம் முகம் இருக்கும் உணர்ச்சியே இல்லாமலிருக்கும். அவ்வப்பொழுது பெய்யும் மழை மேகங்களினால் சூரியனையும் பார்ப்பது அரிது. அந்த காலநிலையில் நாங்கள் பெரும்பாடுபட்டு வீடுவந்து சேர்ந்தோம்.

கெம்பி வணிகவளாகம்

ஹெல்சின்கியில் உள்ள மிகப் பெரிய வணிகவளாகம் இந்த கெம்பி வணிகவளாகம். அதைத் தாண்டி ஒரு மின்னனு கருவிகள் விற்பனை செய்யும் ஒரு வளாகமும் இருந்தது. அதன் பெயர் நினைவினில் இல்லை. ஏப்ரல் 26, 2009 ல் சனிக்கிழமையன்று காலை மைதிலியின் அழைப்பு என்னை எழுப்பியது. அந்த மின்னனு கருவிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு செல்ல பாரதி, ரோஹன் மற்றும் மைதிலியுடன் நானும் சேர்ந்துக்கொண்டேன் . ஹெல்சின்கி ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தோம். இங்கு மெட்ரோ ரயில் நிலையமெல்லாம் இருக்கிறதா என்று நினைத்துக் கொண்டேன். அதள பாதளத்திலிருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தைப் பார்த்ததுமே எனக்கு நியூயார்க் சப்வே ரயில் நிலையம் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டிற்கும் ஒரே வித்யாசம், மக்களின் எண்ணிக்கையே. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இங்கு அப்படி எதுவும் இல்லாமல் அதிகம் அலட்டிக் கொள்ளாத மக்களினால் சலனமற்று இருந்தது. அங்கிருந்து மின்னனு சாதனம் விற்கும் இடத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தோம். சுற்றித் தான் பார்க்க முடியும் அவ்வளவு விலை ஒவ்வொரு பொருளும். ஒவ்வொரு பொருளின் விலையையும் யூரோவில் பார்த்தவுடன் அதை அப்படியே ரூபாயில் கணக்கிடும்போது இடி விழுவது போலிருந்தது. பாரதி மட்டும் ஏதோ வாங்கியதாய் நினைவு. அங்கிருந்து கெம்பி வணிகவளாகம் வந்தடைந்தோம். அது மிகப் பிரமாண்டமாய் இருந்தது. சற்று பார்க்கக் கவரக்கூடியதாய் இருந்த கடைகளில் நாங்கள் உள் நுழைந்தும் வெளியே வருவதுமாய் இருந்தோம். கால் வலிக்கச் சுற்றித் திரிந்து வீடு வந்து சேர்ந்தோம்.

விமான அருங்காட்சியகம்

மறுநாள் காலை என்னை ஃபையர் அலார்ம் எழுப்பியது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த ஒலி அடங்கியது. யாரோ புதிதாய் வந்த இந்தியன் புகையவிட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். மறுபடியும் தூங்கப்போனவனை அழைத்தார் பாரதி. இன்று விமான அருங்காட்சியகம் செல்லலாம் என்று சொன்னார். எனக்கு ஸ்டேயட்டில் இல்லாமல் வேறு எங்கு சென்றாலும் சரி என்று சொல்வதாய் இருந்தேன். தாரிணிக்கும் அன்னாவிற்கும் வேலை இருந்ததால் எங்களுடன் நேற்று வர இயலவில்லை. இன்று தாரிணி மட்டும் எங்களுடன் சேர்ந்துக் கொண்டாள். பாரதி, ரோஹன், மைதிலி மற்றும் தாரிணி யுடன் நான் சேர்ந்துக் கொண்டு விமான அருங்காட்சியகத்திற்கு சென்றேன். அது ’வாந்தா’ என்ற பிராந்தியதிலிருந்தது. கிட்டத்தட்ட விமான நிலையதிற்கு அருகில் இருந்தது. ஹெல்சின்கியிலிருந்து பேருந்தில் ஏறிச் சென்று அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு அடைந்தோம். அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்றவள் ஒரு பெண்மணி. என்ன ஒரு வேகம் ! சிறிது பயந்தே போனேன் அப்படிச் சென்றதும். ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்தோம். வேனிற் காலம் ஆரம்பித்துவிட்டதை உணர்த்தியது அங்கிருந்த பசுமையான காட்சிகள். எங்கு பார்தாலும் பச்சைப் பசேலென இருந்தது. ஆள் அரவமற்ற இடத்தை அடைந்தோம்.

அந்த அருங்காட்சியகத்தை அடைந்ததும் உள்ளே சில மக்களைப் பார்தேன். இங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்றெண்ணினேன். உள்ளே பல வகையான விமானங்களைப் பார்த்தோம். பொம்மை விமானங்களிலிருந்து உண்மை விமானங்கள் வரை அனைத்துமே இருந்தது. ஃபின்லாந்து நாட்டின் விமானப் படை விமானங்களும், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட விமானங்களின் உதிரி பாகங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் வியப்பு. அதில் ஒரு விமானி மேல் கூரையில்லாத ஒரு விமானத்தை ஓட்டிச் செல்வது போலிருந்தது. அந்தக் கடுங்குளிரில் அவர் ஓட்டிச் செல்வது மிகுந்த வியப்பளித்தது. இரண்டாம் உலகப் போரிலும் ஃபின்லாந்து பங்கேற்றது. அப்போது உபயோகப் படுத்திய குண்டுகளும் (500கிலோ, 1000 கிலோ) காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. சில ஆயுதம் தாங்கிய விமானங்களைப் பார்த்ததும் போரின் கொடூரம் என் கண் முன்னே தோன்றி மறைந்தது. அவை அனைத்தையும் கொண்டு வந்திருந்த கேமிராவில் பதிவு செய்தோம். ஒரு உண்மையான விமானமும் அங்கிருந்தது. அதில் உள்ளே சென்று பார்த்து மகிழ்ந்தோம். ஃப்ளைட் ஸிமுலேட்டர் என்னும் கருவி ஆயத்தமாகாததால் அதில் சென்று பயிற்சி செய்ய அனுமதிக்கவில்லை. அங்கிருந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தோம்.

அன்று ஸ்டேயட் வந்து சேர்ந்ததும், துணி துவைக்க எண்ணி, துணி துவைக்கும் எந்திரத்தில் அழுக்குத் துணிகளைப் போடச் சென்றேன். அப்பொழுது ஒரு இந்தியப் பெண் வரவேற்பரையில் கையில் ஹேண்ஸ்ஃப்ரீ யுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். பார்க்க தமிழ்ப் பெண் போலிருந்தாள். அவள் அலைபேசியில் பேசியதிலிருந்து தமிழ்ப் பெண் என்பதை நிரூபணம் செய்தேன். திரு திரு வென்று விழித்துக் கொண்டிருந்தாள். நான் துணி துவைக்கப் போட்டுவிட்டு வந்ததும் அவள் என்னை வழிமறித்துப் பேசிய உரையாடல்,

“ஹாய், ஐயம் லஷ்மி, ஆர் யூ ஃப்ரம் இண்டியா?”, என்றாள்.

“யெஸ்”, என்றேன். மேலும் ஆங்கிலத்தில் பேசப் போனவளை நிறுத்தி “சொல்லுங்க”, என்றேன். அவள் சிறிது மகிழ்ச்சி அடைந்தவளாய், என்னிடம்,

“ஓ தமிழா, நான் டிசிஎஸ் ல வேலை பாக்கறேன், நேத்து தான் இண்டியால இருந்து வந்தேன், இங்க ரொம்ப காசு கேக்ராங்க, நான் லாங் டெர்ம் ல வந்ததால எனக்கு கட்டுப்படி ஆகாது”, என்று பேசிக் கொண்டே போனாள். சரி என்றவனாய்த் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

“ஒரு அப்பார்ட்மெண்ட் கிடைக்ர வரைக்கும் இங்க தங்கனும். நான் வேற இந்த ஊருக்கு புதுசு, என்ன எங்க கிடைக்கும்னு கூடத் தெரியல, இஃப் யூ டோண்ட் மைண்ட், கேன் யூ ஹெல்ப் மீ”, என்றாள்.

இது என்னடா புது வம்பு என்று தோன்றியது. உடனே மைதிலி, தாரிணி மற்றும் அன்னா தங்கியிருக்கும் அறை ஞாபகத்திற்கு வந்தது. இவளை அவர்களுடன் கோர்த்து விடலாம் என்றெண்ணி அவளிடம்,

“ஓ, சரிங்க, எங்க கூட மூனு பொண்ணுங்க வந்திருக்காங்க, அவங்க கிட்ட உங்கள இண்ட்ரடியூஸ் பன்னி வைக்கறேன், சரியா? அவங்க கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க”, என்றேன்.

முகத்தில் மகிழ்ச்சியுடன் “ஓ அப்படியா, சரிங்க”, என்றாள்.

அவர்களின் அறைக்குச் சென்று தாரிணியிடமும், அன்னாவிடமும் இவளை அறிமுகம் செய்துவைத்தேன். அப்போது உள்ளேயிருந்து வந்த மைதிலி இவளைப் பார்த்ததும்,

“ஹேய் நீயா?”, என்றாள் மைதிலி.

பதிலுக்கு லஷ்மி, ”அக்கா நீங்களா?”, என்று கூறிக் கொண்டே, நான்கு கரமும் சேர்த்துக் கொண்டு, நன்றாய்ப் பழகிய தோழிகள் போல் பேச ஆரம்பித்தனர். நான் அவர்களை மாறி மாறிப் பார்த்தேன் இல்லை முழித்தேன். பின்னர் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒருவரையொருவர் தெரியும் என்றும், லக்ஷ்மி மைதிலியின் தங்கையின் தோழி என்றும் கூறியவுடன் என் உள்பட மற்றவருக்கும் விளங்கிற்று. உடனே தாரிணி,

“மைதிலி ரஜினிகாந்த் மாதிரி, எங்க போனாலும் அவளுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க”, என்றாள் புன்னகையுடன்.

சரி வேலை சுலபமாகிவிட்டதை எண்ணி அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

அடுத்த வாரம் ரோமில் பயணம் செய்வோம்...

No comments:

Post a Comment