Sunday, July 12, 2015

வால்பாறை பயணக்குறிப்பு - தொடர்ச்சி


வால்பாறை பயணம்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் காலை உணவை அங்கேயே முடித்தோம். வராதவர்கள், பொள்ளாச்சியில் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதாக சொல்லியிருந்தனர். திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும் வரையில் யாரும் கிளம்பியதாய் தெரியவில்லை. பிறகு அவர்கள் சாப்பிடும் வரையில் காத்திருந்து வீட்டு சாவியை ஒப்படைத்து நாங்களும் கிளம்பினோம். இங்கே இருக்கிறோம், அங்கே இருக்கிறோம் என்று பொள்ளாச்சியில் இருந்த நான்கு தெருக்களையும் மறுபடியும் சுற்றி விட்டு கடைசியில் ஒரு பெட்ரோல் பன்க் அருகில் காத்திருந்தார்கள்.

 

“ஏங்க, உங்களுக்கு பெட்ரோல் இருக்கா மலை ஏற?”, கார்த்திக்.

 

“நிறையவே இருக்கு. I20 நல்லா மைலேஜ் தருது”, சிவபாலன்.

 

“சரி, நான் பெட்ரோல் போட்டுக்கறேன்.”, கார்த்திக்.

 

அங்கிருந்து வால்பாறை நோக்கி புறப்பட்டோம். நகர சந்தடிகளில் இருந்து வால்பாறை செல்லும் பாதை மிகவும் அமைதியாக ரம்யமாக இருந்தது. அப்போது வானம் மேகமூட்டத்துடன், அங்கொன்றும் இங்கொன்றுமாக தூறல் போட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும், பல பெரிய தோட்டங்களும் அதன் நடு நடுவே ஒரு வீடும் பார்க்கையில் மனம் குஷியானது.  கரிய தார்சாலையின் இரு பக்கமும் பச்சை வண்ணம் போர்தியிருந்தது. ஆங்காங்கே சிவப்பு நிற மலர்களைக் கொண்ட மரங்களைப் பார்க்கையில் மனம் கிறங்கடித்தது. முன்பெல்லாம் இதைப் பார்த்து ரசிப்போம். இப்போது, கை உடனே கேமராவிற்கு தான் செல்கிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். எப்போதாவது அதைப் பார்க்கும் போது அந்த பயணமும் பயணம் செய்தவர்களும் நினைவிற்கு வருவார்கள்.

 

ஆழியாறு அணை

 

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆழியாறு அணை வந்தது. சில பேர், திரும்பி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினர். திரும்பி வரும்போது இதற்கெல்லாம் நேரமிருக்காது என்று முடிவு செய்து, ஆழியாறு பூங்காவிற்கு சென்றோம். நாங்கள் 8 பேரும் உள்ளே செல்வதற்காக காத்திருந்தோம். சிவபாலனும் கார்த்திக்கும் என் காரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்ததாக தெரிந்தது. பொறுமை இழந்த சிலர், அங்கு சென்று அழைத்து வந்தோம்.

 

“ஏங்க, இவ்ளோ நேரம்? கார் கிட்ட என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”, நான் சிவபாலனிடம்.

 

“உங்க கார் டிக்கி லாக்கிங் மெக்கானிசம் எங்களுக்கு புரியல. அதான் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருந்தோம். கார் லாக் ஆகி இருந்தும், டிக்கி திறக்க முடிஞ்சது. அப்ரம் தான் தெரிஞ்சுது, கார் கீ பக்கத்துல இருந்தா அத திறக்க முடியும்னு”, சிவபாலன்.

 

“இத என்கிட்ட கேட்டா நான் சொல்லி இருப்பேன்ல. எல்லாரும் கடுப்புல இருக்காங்க. வாங்க சீக்கிரம் போய்ட்டு கிளம்பலாம்”, நான்.

 

அதற்குள் மழை சிறிது வலுத்திருந்தது. ஆனால் மழையில் நனைய அவ்வளவு பிடித்திருந்தது. ஆழியாறு பூங்காவில் தனி நபர் மற்றும் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அணை இருக்கும் படிக்கட்டில் ஏறி சென்றோம். ஆங்கிலத்தில் “breath taking view” என்று சொல்வார்களே, அது போல இருந்தது ஆழியாறு அணை. கிட்டத்தட்ட நிரம்பி இருந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அடர்ந்த வனம் மற்றும் மலை இருந்தது. அடை மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அங்கிருக்கும் மழைக்காடுகளிலிருந்து வரும் நீர் மலைகளினூடே வந்து இந்த அணையில் நிரம்பி இருந்தது. அந்த அடர்ந்த வனப்பகுதியின் ஓரத்தில் சிறிய சமவெளிப் பகுதியில் ஒரு யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது.

 

“கார்த்திக், உங்க DSLR எடுங்க, யானைக் கூட்டத்தை போட்டோ பிடிக்கலாம்”, நான்.

 

“மழையில் நனைஞ்சிருமேனு மேல கொண்டுவரல”, கார்த்திக்.

 

எங்களிடம் இருந்த பாய்ண்ட் அண்ட் ஷூட் கேமிராவில் லேசாகத் தான் அதை பதிவு செய்ய முடிந்தது. இருந்தாலும் நம் கண்களின் லென்ஸ் போல வருமா? இப்போதே பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.

 

“சரி சரி வாங்க கிளம்பலாம். சீக்கிரம் போய் சாப்பிடனும்”, அபினேஷ்.

 

“யாரோ சொன்னாங்க, சாப்பாடு முக்கியமானு”, கார்த்திக்.

 

“சரி விடுங்க, பசிக்குது. மீன் குழம்பு வேற சொல்லி இருக்காங்க”, அபினேஷ்

 

“ஆமா பா, மீன் குழம்புனு சொன்ன உடனே எனக்கும் பசிக்குது. சீக்கிரம் கிளம்புவோம்”, கார்த்திக். அவர்கள் சொல்லி விட்டார்கள் நான் சொல்லவில்லை அவ்வளவு தான்.

 

 

மலை ஏறுதல்

அங்கொன்றும் இங்கொன்றுமாக பெய்துகொண்டிருந்த மழை சிறிது வலுத்திருந்தது. இரண்டு கார்களும் ஐந்தைந்து பேர்கள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் நிரம்பி வழிந்து கொண்டு மலை ஏறத்துவங்கியது. இதுவரை கார்கள் நன்றாகவே ஈடுகொடுத்தது. மலை ஏறத்துவங்கியவுடன் அதன் வேலையை காட்டத்துவங்கியது. அதன் வேலை என்று சொல்வதைவிட அதன் முழு இயல்பைக் (???) காட்டத்துவங்கியது என்று சொல்லலாம். சிறிது நேரத்திற்கெல்லாம் பேய் மழை பெய்யத்துவங்கியது. வைப்பர்கள் முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. அழகான இயற்கைக் காட்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பள்ளத்தாக்கு முழுதும் வெண்பனி மட்டுமே தெரிந்தது. ஓட்டுனருக்கு சவாலான பணி. ஐந்து அடிக்கு முன்னால் இருக்கும் வாகனங்கள் கூட தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அடர்ந்த வனத்தில் வாகனங்கள் செல்ல எதிரே ஓர் வாகனம் நின்று விட்டது. அதனால் சிவபாலனும் வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. பின்னால் மூஞ்சூரு வால் பிடித்தது போல வந்து கொண்டிருந்த கார்த்திக்கும் நிறுத்திவிட்டார். அது ஒரு கொண்டை ஊசி வளைவு. வண்டி எஞ்சின் நின்றுவிட்டது.

 

“என்ன ஆச்சுங்க?”, நான்

 

“வண்டி ஏற மாட்டேங்குதுங்க.”, சிவபாலன்.

 

எல்லாருக்கும் மரணபயம். வண்டி எஞ்சின் நின்றுவிட்டால் பிரேக் பிடிக்காது. பின்னால் பெரிய பள்ளம் வேறு. ஆங்காங்கே, ”இது யானை நடமாடும் பகுதி, அதற்கும் வழி விடுங்கள்”, “சாலையை விட்டு வனத்திற்கு செல்லாதீர்கள்”, “வண்டியை நிறுத்தாதீர்கள்” என்று எச்சரிக்கைப் பலகைகளை வைத்து வேறு பீதியை கிளப்பி விட்டிருந்தார்கள்.

 

பக்கத்தில் கார்த்திக், “என்னாங்க வண்டி ஏறலயா?”, என்றார் கிண்டலாக. பின்னர் சிவபாலன், முதல் கியரிலேயே வண்டிக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வரை கொண்டை ஊசி வளைவைக் கடந்தார். பின்னால் திரும்பி பார்த்தால் கார்த்திக் வண்டியும் சிறிது பின்னால் நகர்ந்து கொண்டிருந்தது. அவர் வண்டியும் ஆஃப் ஆகியிருக்கும் போல.

 

“இனிமே, எப்டி இந்த வண்டிய மலைல ஓட்டனும் கத்துக்கிட்டேன்”, சிவபாலன்.

 

கார்த்திக்கும் இந்நேரம் கத்துகொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டோம். பின்னால் Jazz கார் வந்து கொண்டிருந்தது.

 

“தேவையான பவர் இருந்தா வண்டி ஏறிடுது, ஸ்டேண்டிஸ்டில இருந்து வண்டி எடுக்கர்து தான் கொஞ்சம் திணருது” சிவபாலன்.

 

ஒரு டாடா இண்டிகா வண்டி எங்களை அனாயசமாக கடந்து சென்றது. அந்த ஓட்டுனர் எங்களை ஏளனமாக பார்த்ததாக ஞாபகம். வெகு நேரமாக இந்த கடினமான பயணம் இருந்தது. ஆங்காங்கே தனியார் பங்ளா மற்றும் எஸ்டேட் செல்லும் பாதைகளை கவனித்தோம். ஏதோ ஒர் அரசு எஸ்டேட் அருகில் வாகனத்தை நிறுத்தி, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நாங்கள் வால்பாறை வரை செல்லவேண்டாம் என்றும் ரொட்டிக் கடையில் வலது புறம் திரும்பி 20 கி.மீ வரவேண்டும் என்றும் ஹோட்டலில் வேலை செய்தவர் கூறினார். அப்போதும் பேய் மழை பெய்து கொண்டிருந்தது.

 

ரொட்டிக் கடை என்றால் ஏதோ ஒரு பாய் ஓரமாக ரொட்டிக் கடை வைத்திருப்பார், வழி கேட்கலாம் என்று நினைத்தால், அது ஒரு சிற்றூர். அதற்குள் மழை நின்றிருந்தது. மழை பெய்து விட்டதால் சாலை முழுதும் கழுவி விட்டது போன்று பளபளத்தது. ஓர் ஓரத்தில் வண்டிகளை நிறுத்தி இளைப்பாறினோம் (ஃபோட்டோ பிடித்தோம்). அழகான டீ எஸ்டேட்கள் மலையைப் போர்த்தி இருந்தது. அப்பொழுதுதான் விட்டிருந்த மழை, சில்லென்ற காற்று என்று பார்க்கவே ரம்யமாக இருந்தது. அங்கிருந்து இயற்கை அழகை ரசித்தவாறே (ஃபோட்டோ பிடித்துக் கொண்டே), நாங்கள் தங்கி இருந்த தீபிகா கார்டன் ரிசார்ட் வந்தடைந்தோம்.

 

மதிய உணவு

வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் சோலையார் அணைக்கு அருகில் இந்த தீபிகா கார்டன் ரிசார்ட் அமைந்திருக்கிறது. கூடவே வேறு சில ரிசார்ட்கள் மற்றும் வீடுகளும் அருகில் இருந்தன. பெயருக்கு ஏற்றார்போல் தங்கும் விடுதிக்கு வெளியே பூந்தோட்டம் அமைத்திருந்தார்கள். அந்த விடுதியில் ஆங்காங்கே வீடுகள் கட்டியிருந்தார்கள். அதில் ஒரு வீட்டில் நாங்கள் தங்கினோம். இரண்டு படுக்கை அறைகள், கழிவறைகள், வரவேற்பரை, சமையலறை கொண்டு ஒரு வீடு போல இருந்தது. பிற்பகல் 3.00 மணிக்கு நாங்கள் வந்ததினால் வயிற்றில் பசி இன்னமும் மீதமிருந்தது. மீன் குழம்பும், மீன் வருவலும் செய்திருந்தார்கள். அணையிலிருந்து மீன் பிடித்தாக சொன்னார்கள். எல்லாரும் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது அபினேஷ்க்கு திடீரென்று தொண்டையில் மீன் முள் மாட்டிக்கொண்டதாக தெரிந்தது. அவன் சாப்பிடாமலேயே எழுந்துவிட்டான். அந்த மீன் முள்ளுடன் போராடிக்கொண்டிருந்தான். இதற்குள் அனைவரும் வயிரு நிரம்ப சாப்பிட்டிருந்தனர். அபினேஷ்க்கு வெள்ளை சோற்றை விழுங்குவது, தண்ணீர் குடிப்பது, வாழைப் பழம் விழுங்குவது போன்ற பல கை வைத்தியங்கள் சொல்லப்பட்டன. கண்ணன், சிவபாலன் வெளியே சென்று வாழைப் பழம் வாங்கி வந்தனர்.

 

“என்னடா இப்ப எப்டி இருக்கு?”, நான்

 

“வாழைப்பழம் சாப்ட்துக்கப்பறம் இன்னும் வலி அதிகமாய்டுச்சு”, அபினேஷ்.

 

“சரி இங்க ஏதாச்சு ஆஸ்பிட்டல் இருக்கான்னு விசாரிச்சு அங்க போய் பாப்போம்”, நானும் மற்றவ்ர்களும்.

 

அதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

 

“இருங்க நானும் வரேன்”, கார்த்திக்.

 

“வாழைழம் சாழ்ட்ரக்கூழாது, வழி அழிகமாழ்ச்சி”, அபினேஷ்.

 

“என்னடா தொண்டைல முள் குத்தி நாக்கு குழறுது”, கார்த்திக். கார்த்திக்கும் நானும் கிலியுடன் பார்த்துக்கொண்டோம். சோலையார் அணைக்கு அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் இருப்பதாக ஹோட்டலில் வேலை செய்தவர் கூறினார். நானும் கார்த்திக்கும் மறுபடி பார்த்து புன்னகைத்தோம். அவரின் வண்டியில் அங்கு சென்றோம். அங்கே ஒரு நைட்டியில் 30-40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இருந்தாள். அவள் தான் நர்ஸாம். அபினேஷ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

 

“வாயைத் திறங்க”, நர்ஸ்

 

“லொக் லொக்”, அபினேஷ்.

 

”சரி நீங்க வால்பாறையிலிருக்கும் ஜி.ஹெச். போங்க, அங்க நான் குடுக்கர லெட்டர காட்டினா சீக்கிரமா பாப்பாங்க.

அதுக்கு முன்னாடி ஒரு ப்ரைவேட் கிளினிக் டாக்டர்கிட்ட காட்டுங்க, அவர் இல்லனா ஜி.ஹெச். போங்க. அவர் ஏற்கனவே நிறைய பேருக்கு முள் எடுத்திருக்கார்”, நர்ஸ்.

 

இங்க இதே பொழப்பா இருக்குமோ என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம். அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் வால்பாறைக்கு கார்த்திக் காரில் பயணம் செய்தோம். ஊரை நெருங்க, மனிதனின் ஆக்ரமிப்புகள் தெரிய ஆரம்பித்தன. முதலில் குடலைப் பிடுங்கும் நாற்றம் எங்களை வரவேற்றது. நல்ல வேளையாக அந்த டாக்டர் கிளினிக்கில் இருந்தார். அங்கிருக்கும் ஒரு நர்ஸ் நல்ல வார்த்தைகளைப் பேசி ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

 

“வாயை திறங்க”, டாக்டர்.

 

“லொக் லொக்”, அபினேஷ்.

 

“முள் இல்லையே”, டாக்டர்.

 

அபினேஷ் எங்களை கலவரத்தோடு பார்த்தான்.

 

”இல்லைங்க எனக்கு ஃபீல் ஆகுதே”, அபினேஷ்.

 

“அப்டியா, நல்லா திறங்க. ஆமா முள் இருக்கு, எடுத்திடலாம்”, டாக்டர். எங்களுக்கு அப்பாடா என்றிருந்தது.

 

அபினேஷ்க்கு ஒரு களிம்பை வாயில் வைத்திருக்கும்படி கூறி சிறிது நேரத்திற்கு பிறகு உள்ளே அழைத்தார்கள். 5 நிமிடங்களில், அபினேஷின் மகிழ்ச்சியான குரல் கேட்டது. உள்ளே சென்றதும் வாயெல்லாம் பல்லாக அபினேஷ் நின்றிருந்தான் கையில் முள்ளுடன். அப்பா எவ்ளோ பெரிய முள். அங்கிருந்து மறுபடியும் ரிசார்ட்டுக்கு சென்றோம்.

 

அதற்குள் குழுவில் மீதமிருந்தவர்கள் சோலையார் அணையை ரசிக்க சென்றிருந்தனர்.

“ஜீ, நாங்க வெளியே போய் இருந்தோம், அங்க ஒரு சின்ன அருவி மாதிரி இருந்துச்சி, அங்கேயே குளிச்சிட்டேன்”, செந்தில்.

 

’அடப்பாவிகளா, இங்க ஒருத்தன் மீன் முள் தொண்டைல மாட்டி கஷ்டப்பட்டுடு இருந்தான். அதையெல்லம் கண்டுக்காம, ஊர் சுத்தினத பேசரானே’ என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் ஒருவிததில் சரிதான். எதற்கு எல்லாரும் இதற்காக காத்திருக்கவேண்டும்? எப்படியும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தார்கள்.

 

பயணம் பற்றி எத்தனையோ தடவை சொல்லியிருந்தும் ”எங்கே போரோம்” என்று கேட்டு, சென்னையிலிருந்து வால்பாறை வரை இருந்த பயணத்தில் தூங்கி வழிந்து (மூக்கில் பாட்டு கேட்டுக் கொண்டு) கொண்டிருந்த தினேஷ், இங்கே வந்ததும் டிவியை நோண்டிகொண்டிருந்தான். எனக்கு என்னமோ “மதராஸப்பட்டினம்” “அப்புக்குட்டி” நினைவு தான் வந்தது, தினேஷை நினைக்கும்போது.

 

அனைவரும் வரவேற்பரையில் குழுமியிருந்தோம். இரவு உணவிற்காக காத்திருந்தோம். சிறிது நேரத்திற்கெல்லாம், என் காலில் ஜில்லென்ற ஓர் உணர்வு. பார்பதற்கு கரிய வண்டு போல இருந்தது. நான் உதரியுடன் கீழே விழுந்தது.

 

“இது அட்டப்பூச்சி”, கண்ணன் மற்றும் மற்றவர்கள்.

 

கண்ணன் அதை போஸ்ட்மாட்டர்ம் செய்ய வெளியே எடுத்துச் சென்றார். திடீரென் உள்ளே வந்து,

“யாரோட ரத்ததையோ நல்லா குடிச்சிருக்கு. யாருதுனு பாருங்க”, கண்ணன். என் காலின் விரல் இடுக்கில் பார்த்தால் ஒரே ரத்தம். கடி பட்ட இடத்தில் எனக்கு எந்த வலியோ உணர்வோ இல்லை. நான் குடித்திருந்த பீர் அந்த அட்டைப்பூச்சியை மட்டையாக்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் நிறைய ரத்தம் குடிதிருக்கும்.

 

“எதாச்சும் ஆகுமா”, நான்.

 

“ஒரு அட்டைப்பூச்சி கடிச்சாலாம் ஒன்னும் ஆகாது.”, கார்த்திக்.

 

“உங்களுக்கு மெடிக்கலி இது நல்லது தான். புதுசா ரத்தம் ஊறிடும்”, சிவபாலன். இரவு உணவிற்கு பிறகு டிவியை அணைத்து ஏதாவது பேசலாம் என்று கார்த்திக் கூற, அனைவரும் பேய் கதையைப் பற்றி பேசினர். எனக்கு மொக்கையாகத் தான் இருந்தது. பிறகு அடுத்த நாள் அதிரப்பள்ளி அருவிக்கு செல்வதற்கான திட்டம் பற்றி பேசி உறங்கச்சென்றோம்.

 

அதிரப்பள்ளி

ஜூன் 5 காலை சோலையார் அணைக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அணையின் மேல், முந்நாள் பெய்த மழையில் ஒரு ஈசல் கூட்டம் அழிந்து போய் இருந்தது. அதைத் தின்ன ஒரு எரும்புக்கூட்டம் வந்திருந்தது. அதுகூட தெரியாமல் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்தோம். எரும்புக்கூட்டம் ஒரு பதம் பார்த்தது. இதற்கும் நம் “அப்புக்குட்டி” வரவே இல்லை. நல்ல தூக்கம் போல. காலை உணவருந்திவிட்டு அதிரப்பள்ளி அருவிக்கு செல்ல ஆயத்தமானோம். சிறிது தூரம்தான் போய் இருந்திருபோம், அதற்குள் தமிழக கேரள எல்லை வந்துவிட்டது. தமிழக எல்லை வரை சாலை நன்றாக இருந்தது. அங்கிருந்து கேரள செக்போஸ்ட் வரும் வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. செக்போஸ்ட்டில் ஏற்கனவே ஒரு ஸ்கார்பியோ நின்று கொண்டிருந்தது. பதிவேட்டில் பதிவு செய்ய ஓட்டுனர் போய் இருந்தார்.

“யார்யா இது வண்டிய நிப்பாட்டினது”, சிவபாலன்.

 

“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, செக்போஸ்ட் மாதிரி இருக்கு”, கண்ணன்.

 

அதை மதிக்காமல் சிவபாலன் காரை ஸ்கார்பியோ தாண்டி நிருத்தப் பார்த்தார். அதை உள்ளே இருந்து பார்த்த அதிகாரி கொஞ்சம் கடு கடு முகத்தோடு எங்களைப் பார்த்தார். உள்ளே பதிவேட்டில் பதிவு செய்ய சென்றோம்.

 

“அங்கதான் ஒரு வண்டி நிக்குதுல, அதுக்குள்ள என்ன அவசரம்”, அதிகாரி.

 

“இல்லைங்க வண்டில யாருமே இல்லை. அதனால எங்களுக்கு தெரியாது”, நாங்கள். கோரஸாக நாங்கள் கூறியது, எங்களை ஏற இறங்கப் பார்த்து,

 

“சரி வண்டில சரக்கு இருக்கா? பிளாஸ்டிக் பாட்டில்லாம் இருக்கா?”, அதிகாரி.

 

“சரக்கு இல்ல, தண்ணி பாட்டில் இருக்கு”, நாங்கள்.

 

“சரக்கு இல்லையா?, பாத்துருவோமா?”, அதிகாரி.

 

”பிளாஸ்டி ஃப்ரீ ஃபாரஸ்ட். அதனால பாட்டில எங்கயும் போடாதீங்க.”, அதிகாரி.

 

“சரி”, நாங்கள்.

 

வண்டியில் மது இல்லாததை அவ்வளவு ஆச்சர்யமாகப் பார்த்தார் அந்த அதிகாரி. வண்டியின் விவரங்களைக் குறித்துக்கொண்டு கையில் ஒரு ரசீதைக் கொடுத்தார்கள். திரும்பி வரும்போது காண்பிக்கவேண்டுமென்றும் கூறினார்.

 

அங்கிருந்து சாலை போடப்பட்டிருந்தது. ஆனால் முழுமை செய்யப்படவில்லை. சிறிது தூரம் தான். அதன் பின்னர் வழுக்கும் சாலை போடப்பட்டிருந்தது. மலையிலிருந்து இறங்கும் வளைந்து நெளிந்து செல்லும் சாலை, இருமருங்கிலும் அடர்ந்த வனம், சில்லென்ற காலநிலை, காரில் மனதிற்கு பிடித்த பாடல். என்ன ஒரு ரம்யமான சூழ்நிலை! இந்த தடவை கார்த்திக் கார் முன்னே செல்ல சிவபாலன் பின் தொடர்ந்தார். ஒவ்வொரு வாளைவிற்கும் கார்த்திக் ஒலி எழுப்பிகொண்டே சென்றார். அவரைப் பிந்தொடரும் சிவபாலனுக்கு அவ்வளவு வேலை இல்லை.


“இப்பதாங்க புரியுது கார்த்திக் ஏன் நம்ப பின்னாடி வந்திட்டு இருந்தார்னு”, சிவபாலன்.

 

கண்ணன், “என்னானு?”.

 

“முன்னாடி போர கார் வழிய ஃபிரீ பண்ணிடுது, பின்னாடி போர காருக்கு அவ்ளோ வெலை இல்லை”, சிவபாலன்.

 

வெகுநேரம் கழித்து சாலையில் ஆங்காங்கே சாணத்தின் வாடை. குவியல் குவியலாக சாணம் இருந்தது. கண்டிப்பாக அது யானையின் சாணம். ஒரு சில காய்ந்து கிடந்தது. ஒரு சில புதிதாய் போட்டது போன்று இருந்தது. அதைப் பார்த்ததும் வண்டியில் உள்ளவர்களுக்கு பீதி கிளம்பியது.

 

“நானும் பாக்கறேன், ஒரு யானையைக் கூட கண்ல காணலயே”, தங்கதுரை.

 

“ஏங்க? ஏன் இப்டி?”, நான். அதன் பிறகு தான் தெரிந்தது, மாலை 6 மணிக்கு மேல் இந்தப் பாதையில் வண்டிகள் செல்ல அனுமதி இல்லை. அந்த நேரத்தில் காட்டு விலங்குகள் வெளியே வரும் என்று. அதிரப்பள்ளியைச் சென்றடைய மதியம் 1 ஆகியிருந்தது. வண்டிகளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். கண்ணன் அங்கு எல்லாரயும் ஐஸ்கிரீம் சாப்பிட நச்சரித்தார்.

 

“ஏங்க உங்களுக்கு வயிறு எரியுதுனா, நாங்களும் சாப்பிடனுமா”, நாங்கள்.

 

தினேஷ் மட்டும் அவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் காரணம் புரியாமல் அவரோடு சேர்ந்து சாப்பிட்டான்.

உள்ளே நமக்கு அதிகம் பரிட்சயமான அதிரப்பள்ளி அருவி தென்பட்டது. அனேக தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பாடல் காட்சிகள் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆர்பரித்து ஓடும் அருவியின் மேல் பகுதியில் நாங்கள் இருந்தோம். அருவியில் குளிப்பது என்பது இயலாத காரியம். இருந்தும் அருவிக்கு வரும் காட்டாற்றில் எங்களை சில நேரம் நனைத்துக் கொண்டோம். நேரம் ஆக ஆக, ஆற்றின் நீர்மட்டம் உயர்வதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் வெளியே வந்தோம்.

 

மதிய உணவை அங்கே முடித்து, பெட்ரோல் போட்டுக்கொண்டோம். நான் டேன்க் முழுதும் நிரப்பினேன். ஆனால் கார்த்திக் தேவையான அளவு மட்டுமே நிரப்பினார். பின்னர் தான் தெரிந்தது, பெட்ரோல் விலை கேரளாவில் அதிகம் என்று. அங்கிருந்து ரிசார்ட்டுக்கு வந்தடைந்தோம். போனதை விட வந்தது சீக்கிரம் ஆனதாகத் தோன்றியது.

 

பிளஃப் கேம்

 

கண்ணன் அங்கிருந்து அப்படியே ஊருக்கு செல்வதாகச் சொல்லி கிளம்பிவிட்டிருந்தார். ரிசார்ட்டுக்கு வந்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது எல்லாரும் டீ வெளியே சாப்பிடலாம் என்று யாரோ கூறினார்கள். அனைவரும் டீ குடித்து அரட்டை அடித்துக் கொண்டு ரிசார்ட் வந்தடைந்தோம். வந்து என்ன செய்வது என்று யோசிக்கும்போது, சீட்டாட்டம் ஆடுவது என்று தீர்மானிதோம். அதில் ”bluff game” என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்டத்தை ஆடலாம் என்று அபினேஷ் கூறினான். அந்த ஆட்டத்தை எப்படி ஆடுவது என்று அபினேஷ் கூறும்போதே தெரிந்து விட்டது இது எங்கள் குழுவிற்கு ஏற்ற ஆட்டம் என்று. ஆட்டத்தின் சாரம்சம் இதுதான். “யார் பொய் சொல்லி ஏமாற்றி, அனைத்து கார்டுகளையும் இன்னொருவர் மீது லாவகமாக திணிப்பது என்பது”. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகியிருக்கும். அவ்வளவு சிறப்பாக இருந்தது. மறுநாள் கிளம்பவேண்டுமே என்று நினைக்கும் போது கடுப்பாக இருந்தது. இன்னும் ஒரு நாள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

 

வீடு திரும்புதல்

 

ரிசார்ட்டில் இருந்து தங்கியதற்கு வாடகை கொடுத்துவிட்டு வழியில் எங்கேயாவது காலை உணவைச் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ரொட்டிக் கடை என்னும் ஊரில் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். அனைவருக்கும் சேர்த்து 400 ரூபாய் தான் ஆகிருந்தது. அங்கிருந்து கிளம்பி வந்த வழியே செல்ல ஆரம்பித்தோம். பொள்ளாச்சி இளநீரைச் சாப்பிட்டு அங்கிருந்து அவினாசி வழியாக சேலம் வந்தடைந்தோம். மறுபடி பெட்ரோல் நிரப்புவது, எங்களுக்கு பெட்ரோல் (அதாங்க வயித்துக்கு சோறு) நிரப்புவது, வழியெங்கும் டோல் பிளாசாவிற்கு அழுவது என்று சென்று கொண்டிருந்தது. மறுபடியும் சேலம் – உளுந்தூர்பேட்டை – செங்கல்பட்டு – திருப்போரூர்  வழியாக வீடு வந்து சேர்ந்தோம். திரும்பி வரும்போது சிவபாலனுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டு, தங்கதுரையிடம் ஓட்டுனர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவரும் வண்டியை 140 kmph வேகத்தில் அனாயசமாக ஓட்டினார். படூரில் சிவபாலன், தங்கதுரை இருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்ததும் கார் என்னிடம் கொடுக்கப் பட்டது. இவ்வளவு நேரம் ஒரு பயணியாக ஜாலியாக அனுபவித்து வந்தவனிடம் வண்டியை ஓட்ட சொன்னால் என்னங்க செய்வது. மறுபடியும் எப்போது இது மாதிரி பயணம் அமையப்போகிறது என்ற விரக்தியோடு வண்டியை வீட்டிற்கு செலுத்தினேன்.

திருமண நிகழ்சிக்கு செல்லும் முன்

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழி

ரொட்டிக் கடை ஊரில் இளைப்பாறியது...

மாலை நேர நடை...

சோலையார் அணை

ஆழியாறு அணைக்கு செல்லும் வழியில்...

சோலையார் அணை

அதிரப்பள்ளி சென்று திரும்பும் போது...

ஆழியாறு அணையில்...

சேலம் உளுந்தூர்பேட்டை சாலை ...

No comments:

Post a Comment