ரோம் பயணம்
ரோம் பயணம், என் வாழ்நாளில் மறக்க முடியாத, காண்பதற்கினிய காட்சிகளையும், சொல்லொனாத பூரிப்பையும், நண்பர்களின் நையாண்டித்தனமும் கொண்ட இனிய பயணமாக அமைந்தது. கண்ணுக்கினிய காட்சிகளையும், இது போன்ற நண்பர்களையும் பெற்றால் மனது பூரிப்படைந்து, எவ்வளவு சோகம் நிறைந்திருந்தாலும் மனது புரட்டிப் போடப்படும் என்பது நிதர்சனமான உண்மை என்றே சொல்லலாம். ரோம் பயணத்திற்கு முன்னர் சோக கீதங்களையே மனது பாடிக் கொண்டிருந்தது. இப்பயணம் தான் என்னை, “பாம்பே, மெட்ராஸ், டெல்லி, இது தான் தலைப்புச் செய்தி”(ரட்சகன் பாடல்) என்று உற்சாக கீதம் பாட வைத்தது. இதையே பாடிக் கொண்டிருந்ததால் என் மீது சிறிது கடுப்பாகியிருந்தனர் கூட வந்திருந்த நண்பர்கள். அது வேறு விஷயம்.
ரோம் பயணம் செய்ய வெகு நாளைக்கு முன்னரே நாங்கள் தீர்மானித்து, அதற்கான பயண ஆயத்தங்களை மேற்கொண்டோம். இப்பயணத்திற்கு முதலில் வரமறுத்த என்னை பிறகு இணங்க வைத்த தாரிணிக்கும், மைதிலிக்கும் இக்கட்டுரை வாயிலாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏப்ரல் 30, 2009 எங்கள் அலுவலகதிலிருந்து ஒரு குழு ரோம் நோக்கி பயணம் செய்தது. அதில் நான், அன்னா ஜார்ஜ், ரோஹன், பாரதி, தாரிணி, பாலா மற்றும் மைதிலி இருந்தனர். மே 1 விடுமுறையாதலாலும், அதன் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையாதலாலும் நாங்கள் முன்னரே திட்டமிட்டு ரோம் மற்றும் வாடிகன் நகரைச் சுற்றிப் பார்க்க பயணப்பட்டோம். ஆனால் தாரிணி மட்டும் அவளின் கல்லூரித் தோழி ஒருத்தி (பெயர் ஆர்த்தி என்று நினைவிருக்கிறது) ஃபிரான்சு நாட்டில் உள்ளதாகவும், அவளுடன் ரோம், வாடிகன் நகரம் மற்றும் வெனிஸ் போகவும் திட்டமிட்டிருந்தாள். ஆனாலும் தாரிணி எங்களுடன் அதே விமானத்தில் தான் பயணம் செய்தாள். அவளின் திட்டமிடல் சரியாக இருந்ததால் எங்களுடன் ரோம் விமான நிலையம் வரையில் வந்து சேர்ந்து, பின்னர் அவள் பிரிந்து சென்று அவளுடைய தோழியுடன் ரோம், வெனிஸ் பார்த்துவிட்டுப் பின்னர் நாங்கள் ரோமிலிருந்து திரும்பி ஃபின்லாந்துக்கு வரும்போது அவளும் எங்களுடன் வந்து சேர்ந்தாள். எங்களுக்கு வெனிஸ் நகரம் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை போலும்.
அலுவலகத்திலிருந்து புறப்படும்போது எல்லாரும் ஆயத்தமாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பாலா எங்களுடன் வருவாரோ மாட்டாரோ என்றே நினைத்தோம். கடைசியில் அவர் எங்களுடன் வந்ததே எங்களுக்கு பெரிதாக மகிழ்ச்சி உண்டானது. அங்கிருந்து அவசரவசரமாக கிளம்பி விமான நிலையம் அடைந்தோம். ஹெல்சின்கி விமான நிலையத்தில் ரோம் செல்வதற்கான விமானத்திற்காக காத்திருக்கும்போது, ரோஹனின் இயல்பான நையாண்டித்தனத்தினால் கலகலப்பாக இருந்தது. அவ்வப்போது பாரதியின் துணுக்குகளும், சம்பந்தமே இல்லாத விஷயத்தை நாங்கள் பேசும் விஷயத்தில் சம்பந்தப் படுத்தி பேசும் அவரது இயல்பான தொனியினால் அவ்விடமே ஒரு பெருங்கூத்தாக இருந்தது. அங்கிருந்த ஃபின்னிஷ் மற்றும் மற்ற நாட்டு மக்கள் எங்களது அட்டகாசத்தினால் கவரப்பட்டார்கள் என்றே சொல்லலாம். மலையாளியான அன்னாவிற்கு இந்த தமிழ் பேசும் நண்பர்களுடன் வந்து தான் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டுவிடுவோமோ என்று ஒரு சிறிய மனக்குறையாக இருந்திருக்கும் என்பது என் ஊகம். மராத்தியரான ரோஹனுக்கு அதைப் பற்றிய கவலையே இல்லை என்பேன். விமானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்தோம். பழமையான இத்தாலியின் புகழ் மிக்க ரோமின் ”சியம்பினோ” என்ற விமான நிலையத்தை அடைந்தோம். இந்த விமான நிலையத்தில் ஃபிரான்ஸிலிருந்து ஏற்கனவே வந்திருந்த தாரிணியின் தோழியைத் தேட ஆரம்பித்தோம். மைதிலி தேடிக்கொண்டே விமான நிலையத்திற்கு வெளியே வந்து விட்டாள். அப்போது உள்ளே மறுபடியும் எங்களை ஆவலுடன் பார்த்து ஓடி வந்து கொண்டிருந்தவளை ஒரு போலீஸ் அதிகாரி அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவளை அவளின் பின்னால் மாட்டிக்கொண்டிருந்த பெரிய பையைப் பிடித்து அப்படியே அலேக்காக தூக்கி வெளியே தள்ள எத்தனித்தார். இதையெல்லாம் நாங்கள் தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தோம். இதைப் பார்த்தவுடன் பாரதி,
“அய்யோ, மைதிலி ஏதோ அந்த போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டா, ஏதோ பிரச்சனை போல”, என்றார் பரபரப்பாக.
“அய்யோ, அப்டியா?”, என்றாள் தாரிணி பயத்துடன்.
நானும் கலவரமடைந்தேன். அருகே சென்ற பிறகுதான் அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்ற விவரம் அறிந்தோம்.
“பாரதி, ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க, போங்க”, என்றாள் தாரிணி பயம் கலைந்த கோபத்தில்.
புன்னகையை பதிலாய் அளித்தார் பாரதி.
அதுவும் தாரிணியின் தோழியைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் திரும்பி ஓடி வந்தவளை அந்தப் போலீஸ் அவளின் பையைப் பிடித்துத் தூக்கியவிதத்தை இப்போது நினைத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அங்கிருந்து ரோமிற்கு அருகில், நாங்கள் பதிவு செய்திருந்த ஹோட்டலுக்குப் போக ஒரு பெரிய காரை வாடகைக்கு எடுக்க முடிவு செய்து, அதில் அங்கிருந்து ஹோட்டல் ப்ரிசில்லா வை அடைந்தோம். ஹோட்டலை அடையும்போது மணி இரவு 12. அகோரப் பசி எங்களுக்கு. அந்த நள்ளிரவில் ஒரு உணவகத்தில் ஏதோ மாவினால் செய்து சுருட்டிக் கொடுத்த ஒரு உணவை(?) வேண்டா வெருப்பாக (எனக்கு மட்டுமே பிடிக்கவில்லை போலும் ) சாப்பிட்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.
கூத்து தொடரும்...
No comments:
Post a Comment