Saturday, January 22, 2011

சில கேள்விகள் - 2

சில கேள்விகள். முதல் பதிவிற்கு இங்கே சுட்டவும்

அது ஒரு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பாதை. அவன் அவ்வழியே தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் அடுத்த ஊருக்கு சென்று தன் மளிகை கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். என்றும் தன் வண்டியை மெதுவாக ஓட்டிச்சென்று தான் வருவான். இன்று அவன் மனதிற்கு என்ன தோன்றியதோ, புறப்பட்ட சில நிமிடங்களில் வண்டியின் வேகத்தைக் கூட்டிக் கொண்டே சென்றான். வழியில் எது வந்தாலும் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, எதிரே ஒரு சிறிய திருப்பம் வந்தது, ஒரு பேருந்து வரும் சத்தமும் வந்தது. பேருந்து வருவது தெரிந்திருந்தும் வேகத்தைக் குறைக்காமல் சாலையின் இடது புறமாகவே செல்லலாம் என்று நினைத்துத் திரும்பும் போது இடது பாதையில் சில எருமைகள் சாலையைக் கடக்க முற்பட்டன. சாலையின் இடது புறம் எருமைகளும் வலது புறம் பேருந்தும் தெரிந்தன. சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த வனம். அந்த ஒரு நொடியில் அவனுக்கு அந்த எருமைகளின் மீது எமன் அமர்ந்திருக்கிறானோ என்றே எண்ணத்தோன்றியது. என்ன செய்வதென்று தெரியாமல், ”செத்தோம்டா” என்று நினைத்து வாகனத்தை வலது புறமாக சாலையை விட்டு நகர்த்தினான். வாகனம் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு மரங்களிடையே சென்று ஒரு பெரிய மரத்தின் அடிபாகத்தில் மோதியது, அதிலிருந்து தூக்கு வீசப்பட்டு ஒரு முட்புதரில் விழுந்தான். பிழைத்தான். முட்புதர் அவனைக் காப்பாற்றியது. தனக்கு மறுபிறவி கிடைத்தது என்று நினைதுக் கொண்டான். பேருந்து நின்ற சத்தம் கேட்டது. அவனைக் காப்பாற்ற பேருந்திலிருந்து சில ஈர நெஞ்சங்கள் ஓடி வந்தன.

மேலே சொன்னது புனைவு தான். இருந்தாலும், இது போல் சிலருக்கு மறுபிறவி எடுத்த அனுபவங்கள் உண்டு. சென்னை நகரில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு தினம் தினம் மறுபிறவி என்று நீங்கள் கூறுவதை நான் புன்முறுவலுடன் செவி மடுக்கிறேன்.

இப்போது கேள்விக்கு வருவோம். ஒவ்வொருவருக்கும் மறுபிறவி உண்டா? சொர்கம், நரகம் உண்டா? ஆங்கிலத்தில் “Reincarnation”, “Life After Death” என்றெல்லாம் கூறுகிறார்கள். இதெல்லாம் உண்மையா?

என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த உயிர் பற்றிய கேள்வியின் தொடர்ச்சி தான் இந்த மறுபிறப்பு பற்றியது.

இங்கே பின் வரும் திருக்குறளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் மறுபிறப்பு பற்றி தெய்வப்புலவர் கூறியது நமக்குப் புரியவரும்.

குறள்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.


பரிமேலழகர் உரை

சாக்காடு உறங்குவது போலும் – ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும். பிறப்பு உறங்கி விழிப்பது போலும் – அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.

குறள்

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.


பரிமேலழகர் உரை

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் – அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இங்கே இன்னும் சில திராவிடர்கள் எழுதிய உரையைக் காட்டி உங்களை மேலும் குழப்ப விரும்பவில்லை.

“ஆன்மா கூடுவிட்டு கூடு பாயும்”

“உடலுக்குத்தான் அழிவு உண்டு, ஆன்மாவிற்கு அல்ல”

”ஆன்மா (அ) ஆத்மாவில் இரண்டு வகை
1. ஜீவாத்மா,
2. பரமாத்மா”

”உயிர்களான ஜீவாத்மா ஒவ்வொன்றும், பரமாத்மாவின் அங்கங்களே.”

”ஜீவாத்மா, பரமாத்மாவை அடையும் வரை பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கும்.”

இது போன்ற வாசகங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆத்மா ஏன் ஒரு உடலை விட்டு அடுத்த உடலுக்குத் தாவ வேண்டும்? அது ஏன் கடவுள் (அ) பரமாத்மாவிலிருந்து பிரிந்தது? ஆத்மாவிற்கு அழிவில்லை என்றால் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆத்மாக்கள் உடலைத் தேடி திரிந்து கொண்டிருக்கின்றன.

“Big Bang Theory” யின் படி வெடித்து உண்டான இந்த பூமி, முதலில் எரிந்து கொண்டிருந்தது. குளிர்ந்த பின்னர் தோன்றிய முதல் உயிரினதிற்கான ஆன்மா எங்கிருந்து வந்தது. வேறொரு அண்டத்திலிருந்தா?

அறிவியல் மூலமாக நாம் விடை தேடினால் நமக்கு விடை கிடைக்க இன்னும் சில கோடி ஆண்டுகள் ஆகலாம். அப்போது மனிதனை விட பன்மடங்கு பரிணாம வளர்ச்சியடைந்த ஒரு உயிரினம் விடை தேடிக் கொண்டிருக்கும். ஒரு சிறிய பல்லியினால் மின்சாரத்தையும் அதனால் விளக்கு எரிகிறது என்பதையும் அதற்குத் தேவையான இரை அந்த ஒளியினால் தான் அதன் கண்ணுக்குத் தெரிகிறது என்பதையும் அறிய முடியாது. அது போல் தான் நம் அறிவும், விஞ்ஞானமும். நம் விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, “பிக் பேங்க் தியரி”னால் இந்த அண்டம் உருவானது என்பதைக் கண்டுபிடிக்கலாம், ஆனால் அந்த “பிக் பேங்க்” ஏன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று எளிதாக சொல்லிவிட முடியாது.

இன்னும் சில வாசகங்களைக் கேள்விப்பட்டேன்.

“நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப நமது அடுத்த பிறவியில் நம் பிறப்பு அமையும்”.

இது எவ்வளவு பெரிய அபாண்டம். உதாரணத்திற்கு இப்பிறவியில் ஊனமுற்றோர் மன்னிக்கவும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முந்தைய பிறவியில் பெரிய பாவங்கள் செய்தாவர்களா? அப்படி பாவம் செய்திருந்தால் அந்த பிறவியிலேயே தண்டனை கிடைக்கவில்லையா?

இன்னும் சில கேள்விகள் இருந்தன, அது சொர்கம், நரகம் பற்றியது. மனிதன் இறந்த பிறகு அவனது பாவ புண்ணியங்களுக்கேற்ப அவன் முறையே நரகம், சொர்கத்திற்கு செல்வான். நரகத்தில் எமன் இருப்பான். செய்த பாவத்திற்கேற்ப தண்டனை கொடுப்பான். சொர்கத்தில் இந்திரன் இருப்பதினால் செய்த புண்ணியத்தினால் அங்கே நன்றாக வாழலாம். இது போன்ற கட்டுக் கதைகளெல்லாம் கேட்டு ஒரு வித பயத்திலேயே அறியாப் பருவம் கழிந்தது. கட்டுக் கதைகளெல்லாம் கட்டவிழ்ந்து போனது பின்னாளில்.

”இருக்கர பிறவிலே ஒன்னும் பண்ண முடியல இதுல அடுத்த பிறவியாவது மண்ணாவது” என்று நீங்கள் குறு குறு வென்று பார்ப்பது தெரிகிறது. மேலும் சில சுவரஸ்யமான கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

பி.கு: முந்தைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு நண்பர்கள் சிலர் பதில் எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு சிலர், கேள்விகளுக்கு பதிலையும் பதிவில் போடும்படி கேட்டிருந்தனர்.
”சாரி எனக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்கிரது எனக்கு மட்டும் தான் தெரியும்”.

கேள்விகள் தொடரும் . . .